Showing posts with label Srirangam. Show all posts
Showing posts with label Srirangam. Show all posts

Thursday, 20 February 2014

என்னடா சுந்தர்? போர் அடித்துவிட்டதா? என என் இளைய சகோதரன் மனோ.

பின்ன 5 மணி நேரம் கோவையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு பேருந்தில் வருவதென்றால் சும்மாவா?

மீனா வருவதற்கு மாலை 7 மணி ஆகிவிடும், நேரா டிபன் சாப்பிடுவதற்கு வெங்கடேச பவன் போயிடலாமா?

ஆமாம் பயங்கர பசி!

தெற்கு கோபுர வாசலில் வெங்கடேச பவன் வாசலில் இறங்கும்போதே அக்காரவடிசில், சாம்பார் வடை ஸ்பெஷல் என போர்டு கூவியது என் வயிற்றில் கேட்டது.

சுந்தர்! நான் ஆர்டர் பண்ணுகிறேன், டிப்ஸ் எதுவும் கொடுத்துவிடாதே! இங்கு முதலாளிகளே வேலை செய்வார்கள் என மனோ உஷார்பத்திரி செய்தான். இவர்கள் எல்லாம் நமக்கு ஸ்கூல்-ல் சீனியர்கள் நினைவிருக்கிறதா?

இல்லை மனோ!மறந்துவிட்டது.

உனக்கு எதுதான் நினைவிருக்கிறது?

இலைக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது, சமீபத்தில் மொட்டை அடிக்கப்பட்ட என் தலையில் டென்னிஸ் ராக்கெட்டால் ஆசிர்வாதம் செய்யப்பட்டது.திரும்பினால் AR சார் தன் மொட்டைத் தலை திருமண்ணுடன், டென்னிஸ் ராக்கெட்டுடன்  அபய சேவை சார்த்தினார்.

எனக்கு ஒரு ஸ்வீட் கொடுப்பா! என்றவாறே AR, சுந்தர்! பார்த்தாயா? எப்படி மனோ-வை உருவேற்றி வைத்திருக்கிறேன். மாலை 4 மணிக்கு வெங்கடேச பவன், 6 மணிவரை டென்னிஸ், அப்புறம் 8 மணிவரை பிரிட்ஜ்.

சரி சார்!நடக்கட்டும் உங்கள் ராஜ்ஜியம்.

மனோ.இல்லை சுந்தர்! அவர் ஒரு கை சேர்ப்பதற்காக கதைகட்டுகிறார்!

மூவரும் கிளப்-ல் போய் இறங்கியவுடன், சுந்தர்! AR முதலில் கோர்ட்டில் நுழையட்டும், நாம் சிறிது நேரம் கழித்து செல்வோம் என்று மனோ காதை கடித்தான்!

Dr.முரளி, கஸ்தூரி, சுப்ரமணியன் சார் எல்லோரும் AR-ஐ பார்த்தவுடன், வாங்க சார்! இன்றைக்கு என்ன ஸ்பெஷல்? எனக் கலாய்த்தனர்.

வா சுந்தர் உள்ளே போலாம் என்றவாறே, இதுக்குத்தான் சொன்னேன் என்றான் மனோ.

AR, ஹேய் கஸ்தூரி பான் பராக் இருந்தால் கொஞ்சம் கொடேன்!
டாக்டர், AR சார்! நீங்கள்  கிளப்-க்கு வெளியே போய்தான் துப்பணும்! அதுக்குள்ளே நாங்க ஒரு செட் விளையாடி விடுகிறோம் என சைடு வாங்கினார்.

AR, சுதாரித்துக் கொண்டு, இல்ல இல்லப்பா நான் முதலில் ஒரு செட் விளையாடிட்றேன் என களத்தில் இறங்க, கஸ்தூரி AR சார், வேணும்னா பான் பாரக் ஒவ்வொரு கேம்-க்கு வேணும்னாலும் தாரேன் என வம்பிழுக்க,டாக்டர் தன் டென்னிஸ் elbow-க்கு strap செய்துகொள்ள, மனோ, கஸ்தூரி தத்தம் முழங்கால்களுக்கு knee guard போட்டுக்கொள்ள, AR எப்போதும்போல் தன் வெற்றிலை,சீவல், ரங்கா புகயிலை மற்றும் தன் கதாயுதத்துடன்,  மனோ & AR ஒரு டீம், டாக்டர் & கஸ்தூரி ஒரு டீம் என களை கட்டியது.

சுப்ரமணியன் சாரிடம், என்ன சார், இந்த தடவை நீங்கள் மலேசியா போய் இருந்தது எனக்குத் தெரியாது என, ஆமாம் சார்! சங்கருக்கு Acute Deailgnment என புதுவிதமான ஸ்ட்ரெஸ், மாட்டுப்பெண் அந்த சமயம் பார்த்து வேலை விஷயமாக லண்டன் போய்விட்டாள்! நானும் அவனுக்கு சரியானவுடன் உடனே வந்துவிட்டேன் என சொல்லி முடிக்க,

AR, ஏய் கஸ்தூரி! ஏன்டா எனக்கு சர்வீஸ் வின்னர் அடிக்கிறாய் என சலித்துக்கொள்ள, மனோ! உனக்கு Fore hand விளையாடவே தெரியாதா? Back hand போட்டு கொல்லாதே!நானே strap கட்டிக்கொண்டு கொண்டு விளையாடுகிறேன் என்று  டாக்டர் கடிக்க , சுப்ரமணியன் சார், என்ன சார்? மனோ-வை Well taken என்கிறீர்கள், அது உங்களுடைய பந்து  என துவைக்க, score என்ன என்று கேட்டால் 5-5 என்கிறார்கள்.

AR வெளியே வந்து, சுந்தர்! வர்றியா? உனக்காக ஒரு செட் வேணா ஆடுகிறேன் என்றார்.
இல்ல சார் எனக்கு கஷ்டம் என்று சொல்ல, AR நீ எங்க வேணாலும் போய் விளையாடு, ஆனால் நம்ம கிளப் மாதிரி வராது  என சொல்ல,அவனை கேட்காதீர்கள் சார்! கேட்டால் டெல்லி, சோலன் என்று பினாத்துவான் என்று  மனோ AR நெருப்பில் கொஞ்சம் நெய் வார்க்க, நான் பதிலுக்கு நீங்களும்தான் ஒவ்வொரு மார்ச்-ம் குன்னூருக்கு UPASI Bridge tournament-க்கு வந்து தோத்துட்டு, டென்னிஸ் மட்டும் விளையாடிட்டு போகிறீர்கள் என்னை வந்து பார்த்தீர்களா? என ரவுண்டு கட்ட, AR, சுந்தர்! என்ன வேணா சொல்லு, எங்களை மாதிரி நீ ஸ்ரீரங்கத்தில் ஜாகை வாங்கிக் கொண்டு செட்டில் ஆக முடியுமா? எனக் கேட்க, நான் ஸ்ரீ ரெங்கநாதர் நினைக்க வேண்டுமே என துக்கம் தொண்டையை அடைக்கச் சொல்ல, ஒரு 10 நிமிட இடைவெளி.

AR ஆதுரத்துடன் வந்து இன்னைக்கு தியாகராஜர் ஆராதனை உற்சவம்-TM.கிருஷ்ணா கச்சேரி, எல்லோருக்கும் என்னுடைய வீட்டில்தான் தளிகை முக்கியமா ரஸவாங்கி உண்டு என்று சொல்ல, டாக்டர்.முரளி, AR சார்! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார், இன்றைக்கு அரவணை ஸ்வீட் என்று மட்டும் சொல்லுங்கள், அவன் TM.கிருஷ்ணா-க்கு கார் கதவு கூட திறந்து விடுவான் என்று அவர் பங்குக்கு கொஞ்சம் வாரினார்.

சரியாக ஏழரை மணிக்கு, TM.கிருஷ்ணா-புவி நிடா சுதனே!( எனக்கு சங்கராபரணம் மட்டும்தான் தெரியும்-அதுவும் கொஞ்சம் டவுட்டு)என்று ஆரம்பித்தவுடன், AR, வா வா! உங்களுக்காகத்தான் வெய்ட் செய்து கொண்டிருக்கிறேன்! சாப்பிடலாம் என வலது பக்கத்தில் AR, இடது பக்கத்தில்  சுப்ரமணியன் சார், பக்கத்தில் கோத்ரேஜ் கட்டிலின் மேல் முட்டி மடக்க முடியாத மனோவுடன் ஜுகல்பந்தி சாப்பாட்டுக் கச்சேரி முடிந்தது.

சுந்தர்!நாளைக்கு"விசாகா ஹரி ப்ரோக்ராம், இல்லை சார். அக்காரவடிசில்! இல்லை சார்,டெல்லி கிளம்பறேன், மனோ-க்காக வந்தேன் சார்! அடுத்த மாதம் வருகிறேன்.

எனக்காக ஸ்ரீ ரெங்கநாதரிடம் கொஞ்சம் உத்தரவு கேளுங்கள் சார் என்றேன் AR என்கிற ராமானுஜரிடம், AR-க்கு சிறு வயது, வெறும் 76 தான்.