Wednesday 4 December 2013

03.05.2013

மறதி

யானை   - எப்போதும் இல்லை
நாய்         - எப்போதாவது
மனிதன் -  எப்போதுமே!

இதை உண்மையாக்க 31  வருடம் கழித்து  வந்தான் எனது பால்ய சிநேகிதன் .

கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி என் மீட்டிங் அறையில் 5 மேனேஜர்கள் சமேதராக, இவ்வருடTarget-யாவது வென்றடைய பிரம்மப் பிரயத்னம் செய்து கொண்டிருந்தபோது வந்த முதல் அலைபேசி அழைப்பை Silent-ல் போட்டு விட்டு தொடர்ந்தபோது,  அடுத்து  வந்த தொலைபேசி  அழைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.அழைப்பை ஏற்ற உடன் அம் முனையிலிருந்து நீங்கள் மீனாக்ஷிசுந்தரம்(என்னுடையபூர்வாசிரமப்பெயர்) தானே? நான் தியாகு கரூர்-ல் இருந்து பேசுகிறேன். உங்களுடன் 8-ம் வகுப்பில்1978-ம் வருடம் படித்தேன், இவ்வாறு ஒரு முனையில் அவர் தொடர்ந்து பேச அனுமதித்து விட்டு நான் சுதாரித்து கொள்ளப் பார்த்தும்  என்னால்  முடியவில்லை. மேலும் எங்களு டைய சம்பாஷணைகளை கீழ் கண்டவாறு தொடர்ந்தபோதும்,

தியாகு: நம் கிளாஸ் டீச்சர்  குளோரி மரகதம்!
நான்       : ஆமாம்
தியாகு:நீங்கள் கூட சதாசிவத்தின் சைக்கிளை  பிடுங்கி வைத்துக் கொள்வீர்கள், நான்  தான் சமாதானம்    செய்து வைப்பேன்.
நான்  : அப்படியா?
தியாகு :நீங்கள் கூட கையெறி பந்தினால் என் இடது முதுகில் என்னை அடித்த வடு இன்னும் இருக்கிறது.
நான் : அப்படியா ? (சரியான தீவிரவாதியாய் இருந்திருப்பேன் போலிருக்கிறது)
தியாகு : நான் கூட உங்களை நீங்கள் படித்த கல்லூரி விடுதியில் வந்து சந்தித்தேனே!
நான்  :அப்படியா?
தியாகு :நீங்கள் புதுகோட்டை-க்கு குடி பெயர்ந்த போது நான் மேல ரத வீட்டில் வந்து  சந்தித்தேனே!
நான் :அப்படியா?
தியாகு : உங்கள் இளைய சகோதரர்  மனோகர்  எப்படி  இருக்கிறார்? அம்மா அப்பா   எப்படி  இருக்கிறார்கள்  ?
நான் : எல்லோரும் நன்றாக  இருக்கிறார்கள், நான் இந்த 10-ம் தேதி வியாபார அலுவலுக்காககரூர் வருகிறேன், கட்டாயமாக உங்களை சந்திக்கிறேன்  என்று எனக்கே என் மேல் முதல்முறையான பரிதாபத்துடன், தியாகு-வுக்கு பிரியாவிடை கொடுக்க நேர்ந்தது. இவ்வளவுக்குப் பின்னரும் அவரை எனக்கு தெரிந்து கொள்ள முடியவில்லை . அந்த மாலை, இரவு முழுவதும்முதன் முறையாக எனது மூளை-யை கசக்கிய போதும் அவரை ஞாபகத்திற்கு கொண்டு வர முடியாமல் உறங்கிப் போய்விட்டேன்.

எனது பள்ளித்தோழன் GT, கோகுலக் கண்ணன் நிறத்தைப் பெற்றவனாக இருந்தாலும், நல்லகளையும், வடிவும் உள்ளவன், மேல் உதடும் மூக்கும் சந்திக்கும் இடம் நல்ல அழுத்தத்துடன்அவன் புன்னகையை கூடுதலாக்கும்.

கண்கள் இரண்டும் நல்ல பளபளப்புடன் எப்போதும் ஒரு தேடலுடன் கூடியது, தலை நல்லதேங்காய்எண்ணெய் தடவி படிய வாரி, சுத்தமான உடை உடுத்தி, எப்போதும்உற்சாகமும் சாந்தமும் உடையவன். அவனுடைய பள்ளிச் சீருடையில் கால்ச் சட்டை மட்டும்இருவர் போட்டுக் கொள்ளும்படி இருக்கும். அதே போல் தேசிய மாணவர் படை சீருடையும்அவனுக்கு  அப்படியே வாய்த்திருந்தது.

அவனுடைய பின்னந்தலையில் ஒரு முடிக் கற்றை மட்டும் படியாமல் அவன் எங்குஇருந்தாலும் பின் புறம் பார்த்தால் கூட உடனே சொல்லக் கூடிய அடையாளம். அவன் குறும்பன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அவனை GT என்றே கூப்பிடுவோம், ஏனென்றால் அப்பொழுது GT என்றால் மல்தா அல்லது ஆட்டையை போடு என்ற ஒரு" ஸ்லாங்: இருந்தது. அவன் எவ்வளவு ஆட்சேபித்தாலும் அவனை GT என்று சொல்லி வெறியேற்றுவதில் எங்களுக்கு ஒரு அளவில்லாத ஆனந்தம். சடாரென்று கனவு கலைந்து எழுந்த நான் சற்று சுதாரித்தவுடன் இந்த GT -தான் நேற்று மதியம் தொலை பேசியில் என்னை தன் அன்பால் ஆட்கொண்ட G.தியாகராஜன் என்று உணர்ந்தேன்.

பிறகு அந்த 10-ம் தேதி அவனுடனும் எனது மற்றொரு பள்ளித் தோழன் சதாசிவமும், கரூர், திருவள்ளுவர் விடுதியில் இரவு உணவருந்தி, கூடிக் குலாவினேன்என்று  சொல்லவும் வேண்டுமோ! இப்பவும் GT-ன்  பின்னந்தலை முடிக் கற்றை அப்படியே இருக்கிறது.

காலம் எவ்வளவு தூரம் நம்மை தள்ளிச் சென்று விடுகிறது!

No comments:

Post a Comment